முக்திக்குப் பின்
Click here to read this in English.
A poem inspired by conversations with TMK from the TMK unplugged event and with my wife later that night. Thanks to Vaidehi for the suggestion to write this poem from the perspective of a woman which, I think, vastly improved it.
முன்றொரு நாள் நான் முக்தியடைந்தேன்.
என் வீட்டிலேயே முக்தியடைந்தேன்.
காக்கை கரைய
நாய்கள் குரைக்க
சிந்திய பாலில் ஈக்கள் மொய்க்க
பெற்ற பெண் பேய் போல் அழ
கட்டிய கணவன் ஏதோ பினாத்த
செய்யும் வேலையில் பெருஞ்சலிப்புத் தோன்ற
இம்மாயா உலகை விட்டு
பரமசிவனின் கயிலையில்
பரமானந்த முக்தியடைந்தேன்.
பரமசிவனின் கயிலையில்
எங்கும் பரமானந்தம்
எதிலும் பரசிவம்.
பரமசிவனின் கயிலையில்
முக்திக்குப் பின்
பத்து வினாடி கழிந்தது.
பரமசிவனின் கயிலையில்
காக்கை கரைவதில்லை.
நாய்கள் குரைப்பதில்லை.
ஈக்கள் மொய்ப்பதில்லை.
பெற்ற பெண் அழுவதில்லை.
கட்டிய கணவன் பினாத்துவதில்லை.
பினாத்துதல் என்ற பதமே இல்லை.
செய்யும் வேலையில் சலிப்பேதும் இல்லை.
செய்ய ஒரு வேலையுமில்லை.
சலிப்பென்று எதுவுமே இல்லை.
பரமசிவனின் கயிலையில்
முக்திக்கு பத்து வினாடிக்குப் பின்
முற்றிலும் சலித்துப் போனேன்.
சலித்துப் போய் பரமசிவனிடம்
பிறக்கும் வரம் கேட்டு,
மீண்டும் மீண்டும்
பிறக்கும் வரம் கேட்டு,
மீண்டும் மீண்டும் பிறந்து
பரமுக்திக் கயிலையின் பக்கமே வராத வரம் கேட்டு
மீண்டும் பிறந்து மீண்டு வீட்டுக்கு வந்தேன்.
முக்தியின் இனிமையின் இனிமையும்
என் வீட்டின்
இழிமையின் இழிமைக்கும் ஈடாகா!